30 டிச., 2014

சாகித்ய அகாடமி விருது - 2014

தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவரான பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற புதினத்துக்கு, சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய உலகில் மிக உயரிய விருதான சாகித்ய அகாதமி, ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசையும் பாராட்டுப் பத்திரத்தையும் கொண்டதாகும். இந்த ஆண்டு 20 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாதமி விருது குறித்த அறிவிப்பு டெல்லியில் 19.12.2014 ..............
வெளியிடப்பட்டது.  இதில் தமிழ் மொழிக்கான விருது, பூமணி (வயது 68) எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற புதினத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம், 9–ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ள விழாவில் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
 
இந்த ‘அஞ்ஞாடி’ புதினத்தை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1066 பக்கங்களைக் கொண்ட இந்த புதினத்தின் விலை ரூ.925. எழுபதுகளின் இறுதியில் எழுதத்தொடங்கிய பூமணி தமிழின் இயல்புவாத அழகியலை முன்னெடுத்தவர். அவருடைய  “பிறகு” என்ற புதினம் அதன் மிதமான இயல்புச்சித்திரிப்பு காரணமாக பெரிதும் விரும்பப்பட்டது. கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை தேசியதிரைப்பட நிறுவனத்திற்காக எடுத்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.. சிறுவயதிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த பூமணிக்கு ஏற்கனவே பல விருதுகள் கிடைத்து இருக்கின்றன. அதில் ‘அஞ்ஞாடி’ புதினத்துக்கு மட்டும் 6 விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 புதினங்கள்
 ‘பிறகு’ ‘வெட்கை’ ‘நைவேத்யம்‘ ‘வரப்புகள்’ ‘வாய்க்கால்’ ‘அஞ்ஞாடி’

கதைக்களம்
இந்தப் புதினம் தமிழ்நாட்டில் 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு சாதிக்கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் சமுதாயத்தின் ஒவ்வொரு தளத்திலும் நிகழ்கிற வன்முறை மனிதர்களைப் பிரிக்கிற... வன்முறையின் இடையேயும் இழையோடுகிற ஆண்டி–மாரி என்னும் இருவரிடையேயான தூய நட்பு மண்ணையும் மனிதர்களையும் பிணைக்கிற அன்றாட வாழ்வின் அற்புதங்கள் ஆகியவற்றை சித்திரிக்கிறது. 10 ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்து தனக்கே உரித்தான அற்புதமான நடையில் பூமணி எழுதி உள்ளார்.



வாழ்க்கை குறிப்பு
எழுத்தாளர் பூமணி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் பூ.மாணிக்க வாசகம். விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் படித்து கூட்டுறவு துறையில் வேலைக்குச் சேர்ந்தார். 2005–ஆம் ஆண்டில் கூட்டுறவு துணை பதிவாளராக சென்னையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் அதன் பின்னர் கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.