21 பிப்., 2015

10ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை மார்ச் 4க்குள் முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

சென்னை: இந்தாண்டு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை, வரும் 4ம் தேதிக்குள் முடிக்க, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி அதிகாரிகள், வழிகாட்டுதல் வழங்குகின்றனர்.
கடந்த 2011 - 12ம் கல்வியாண்டில், சமச்சீர்க் கல்வி மற்றும் புதிய பாடத்திட்டம் அறிமுகமானதால், 10ம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கு ..........
செய்முறைத் தேர்வு அறிமுகமானது. மொத்தம், 100 மதிப்பெண்களில், 75 மதிப்பெண்கள் அறிவியல் கருத்தியல் (தியரி) தேர்வுக்கும், 25 மதிப்பெண்கள் செய்முறைத் தேர்வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் செய்முறைத் தேர்வில், 20 மதிப்பெண்கள் வினா - விடைகளுக்கும், ஐந்து மதிப்பெண்கள் மாணவர்களின் செயல்பாடுகளுக்கான சி.சி.இ., என்ற தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு அடிப்படையில் வழங்கப்படும். ஆய்வுக்கூட செயல்திறன், ஆய்வுக்கூட வருகை, செயல் ஈடுபாடு ஆகியவற்றுக்கு தலா ஒரு மதிப்பெண்ணும், ஆய்வக பதிவுக் குறிப்பீடுக்கு இரு மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில், வரும் 24ம் தேதி முதல் செய்முறைத் தேர்வை நடத்தி, மார்ச் 4க்குள் முடிக்க, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம், தலைமை ஆசிரியர்களுக்கு, உரிய அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.