21 பிப்., 2015

உண்மை தன்மை அவசியத்தால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர முடியாமல் தவிப்பு


தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலர் இளங்கோ
சிவகங்கை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் தேர்வான பலர், அதற்கான உண்மை தன்மை அவசியத்தால் அரசு உதவிபெறும் பள்ளியில் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.
2011க்கு பின் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியில் சேர தகுதித்தேர்வு தேர்ச்சி பெறுதல் அவசிய மாக்கப்பட்டது. கல்வித் தகுதி அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்ட நிலையில், தகுதித்தேர்வை எழுதி தேர்வான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பலர் பணியில் சேர முடியாத நிலை உள்ளது.
தகுதித்தேர்வு சான்றுகளின் உண்மைத் தன்மை தேவை எனக் கூறி பள்ளி நிர்வாகங்கள் மறுப்பதால் அதற்கான சான்றை பெற, சி.இ.ஒ., மற்றும் சென்னை டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு அலைவதாக புகார் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிலர் கூறுகையில், "அரசு பள்ளிகளில் தகுதித்தேர்விற்கான உண்மைத்தன்மை கேட்கவில்லை. அரசு உதவிபெறும் பள்ளிகளில் கேட்கின்றனர். உண்மை தன்மையை பெற டி.ஆர். பி.,யை அணுகினால், சரியான பதில் இல்லை. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலைக்கு செல்ல முடியவில்லை" என்றனர்.
தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலர் இளங்கோ கூறுகையில், "கல்வித்தகுதிக்கு மட்டுமே உண்மை தன்மை தேவை. தகுதித்தேர்விற்கு தேவையில்லை. இதை பொறுத்தவரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஒரே நடைமுறைதான். இதிலுள்ள முரண்பாட்டை டி.ஆர்.பி., களைய வேண்டும், என்றார்.