21 பிப்., 2015

அரசுப் பணியை எதிர்பார்த்துக் காத்திருந்த சிறப்பாசிரியர்களுக்கு அதிர்ச்சி


பிப்ரவரி 21,2015,11:03 IST
கோவை: மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடக்கிய இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், பணியாற்றி வந்த சிறப்பாசிரியர்கள், பணிநிரந்தர அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், புதிய சிறப்பாசிரியர்கள் நியமன அறிவிப்பு, தொகுப்பூதிய ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், 2009-ம் ஆண்டு முதல்..................
மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய இடைநிலை கல்வித்திட்டம் (ஐ.இ.டி.எஸ்.எஸ்.,) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், தொகுப்பூதியத்தின் கீழ் 175 சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 18 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
இந்த ஆசிரியர்கள், முதலில் தனியார் தொண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ், பணியாற்றி வந்தனர். இதில், பல்வேறு குளறுபடிகள் நடந்ததை தொடர்ந்து, அரசே இத்திட்டத்தை ஏற்று செயல்படுத்தி வருகிறது. அரசு பொறுப்பேற்ற பின்பு, பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில், பல மாதங்கள் ஊதியம் பெறாமலே பணிபுரிந்து வந்தனர்.
இதில், பணிபுரிந்து வரும் 90 சதவீத ஆசிரியர்கள், 20 ஆண்டுகால அனுபவம் கொண்டவர்கள். சமீபத்தில், மாற்றுத்திறனாளிகள் பள்ளிகள், மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளிகளில் காலியாக உள்ள 220 சிறப்பாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசுத் தேர்வுத்துறை தரப்பிலிருந்து அறிவிப்புகள் வெளியானது, அரசு பணியை எதிர்பார்த்து காத்திருந்த இவர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பாசிரியர்களுக்கான பட்டியலில், ஐ.இ.டி.எஸ்.எஸ்., திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி, மீதமுள்ள இடத்திற்கு மட்டும் புதிய சிறப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சிறப்பாசிரியர் ஒருவர் கூறுகையில், "20 ஆண்டுகளாக, தனியார் தொண்டு நிறுவனத்தின் கீழும், நான்கு ஆண்டுகளாக அரசு திட்டத்தின் கீழும் பணியாற்றி வருகிறேன். அரசு திட்டம் சார்ந்த பொறுப்பேற்ற பின், 2010-11ல் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. பின், 2011-12, 2012-13 ஆண்டுகளுக்கான ஊதியம் இதுவரை கிடைக்கவில்லை.
சமீபத்தில், 2013-- 14ம் ஆண்டுக்கான ஏழு மாத ஊதியமும், 2014- 15க்கான ஆறு மாத ஊதியம் மட்டும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக, பணிநிரந்தரம் செய்யப்படும் என காத்திருந்த எங்களை, புறக்கணித்து புதிய ஆசிரியர்களை நியமிப்பதில் நியாயமில்லை" என்றார்.