3 ஏப்., 2015

வாழ்க்கையை அறியும் கல்வி

வாழ்க்கையை அறியும் கல்வி

13 March 2015 01:25 AM IST
நன்றி தினமணி
இந்தியாவை அறிவு சார்ந்த வல்லரசாக உருவாக்கவும், அறிவியல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளிலும் தேவைகளை நிறைவு செய்யவும் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கல்வி என்பதை சொத்துரிமையைப்போல அடிப்படை உரிமையாக்கி, இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டத்தை ஏற்படுத்தி, ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி, பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி, கல்லூரிக் கல்விவரை .........
அனைத்தும் அரசால் இலவசமாக வழங்கப்படும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
எத்தனையோ விஷயங்களில் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் நாம் கல்வியிலும் அதைப் பின்பற்ற வேண்டும். ஆம், அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு அதன் மழலைக் கல்விமுதல் கல்லூரிக் கல்வி, ஆராய்ச்சிக் கல்விவரை அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகின்றன.
கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமாக பாடத்திட்டம் அமைய வேண்டும். நிகழ்கால அரசியல்வாதிகளின் படைப்புகள், ஆட்சியாளர்கள் சார்ந்த சாதி, மதம் தொடர்பான கருத்துக்கள் இடம்பெறுவதை தவிர்த்து, அரசியல் சச்சரவுகளில் சிக்காத வகையில் பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்.
மாணவர்களிடையே ஆளுமைப் பண்பு, பொது அறிவு, பேச்சாற்றல், நெருக்கடி வரும்போது முடிவெடுக்கும் திறன், தன்னம்பிக்கை, விளையாட்டில் சிறந்து விளங்குதல், சிந்தனைத் திறனை வளர்த்தல்,
படைப்பாற்றலை ஊக்குவித்தல், தனித்திறமைகளை வளர்த்தல் உள்ளிட்டவற்றை வளர்க்கும் வகையில் பாடத்திட்டங்கள், செயல்திட்டங்கள் அமைய வேண்டும். வேலைவாய்ப்புக்கு ஆதாரமாக அமையும் கல்வி அவசியம்.
ஆசிரியரை தோழராகவும், சிந்தனையாளராகவும் கருதுவது மேலைநாட்டுப் போக்கு. ஆசிரியர்களை தெய்வமாகக் கருதுவது இந்திய மண்ணின் இயல்பு. அதனால்தான் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்கிறார்கள்.
ஆசிரியர்கள் பண்பில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர் பணி என்பது ஒரு தொழில் அல்ல. அவர்கள் சமுதாய வழிகாட்டி. மாணவர்களிடம் நன்கு பழகுபவராக இருக்க வேண்டும். அப்போதுதான் மாணவரை நல்ல குடிமகனாக மாற்ற முடியும்.
இன்றைய நிலையில் ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்த அளவுக்கு அவர்கள் கற்பிக்கும் கல்வித்தரம் உயரவில்லை. நாட்டில் ஆண்டுதோறும் 23 கோடி பேர் தொடக்கக் கல்வி கற்றாலும், உயர்கல்விக்கு 3 கோடி பேர் மட்டுமே செல்வதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
ஆசிரியர்கள் தேர்வு கல்வித் தகுதியைப் பொருத்து இருக்க வேண்டும். ஒழுக்கம் சார்ந்த புலனாய்வு அறிக்கை பெறப்பட்டு அதன்பிறகே அவர்களுக்கு பணி வழங்க வேண்டும். சாதி, பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது. திறமைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஆசிரியர்கள் தினசரி தங்களைப் புதுப்பித்துக்கொள்பவர்களாக இருக்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதை தவிர்த்து தகுதியும், திறமையும் நிறைந்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த செய்ய வேண்டும்.
ஆசிரியர்களில் நிரந்தரப் பணி, தொகுப்பூதியம் என இரு பிரிவாக இருப்பதை அகற்ற வேண்டும். ஆசிரியர் சங்கங்கள் எல்லையை அறிந்து நடந்து கொள்வதோடு, நிர்வாகத்தில் அதிக தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும்.
கற்பிக்கும் முறைகளில் மாற்றம் வேண்டும். யோகா வழி கல்வி, விடியோ முறையிலான கல்வி, செயல்முறை விளக்கம் வழியிலான கல்வி, பார்த்து புரிந்துகொள்ளும் வகையிலான கல்வி வேண்டும்.
மனனம் செய்து படிப்பது என்பது கற்பனை சக்தியை மழுங்கடித்துவிடும். மனனம் செய்து தேர்வு எழுதும் வகையிலான கல்வி முறையை மாற்ற வேண்டும்.
இன்று உலகம் முழுவதுமே பொருள் ஈட்டும் வகையிலான கல்வியே உள்ளது. வாழ்க்கையை சமாளிப்பதற்கான கல்வி வேண்டும். நாட்டில் எத்தனையோ பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக, பொறியாளராக, மருத்துவராக, வழக்குரைஞராகப் பணி செய்து பெரும் பொருள் ஈட்டுபவர்களாக உள்ளனர்.
பல்வேறு வெற்றிப் பதக்கங்களை வென்ற அவர்களில், எத்தனையோ பேர் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வாழ்ந்து வருகின்றனர்.
பிறந்தது வாழ்வதற்கே. வாழப் பிறந்து வாழ முடியாமல் போய் விடுகிறோம்.
வாழ்க்கைக்கு உதவாத படிப்பால் என்ன பயன்? எனவே, வாழ்க்கை கல்வியை
அடிப்படையிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும்.
படிப்பில் சாதிப்பதோடு, வாழ்க்கையில் சாதிப்பவர்களாக மனிதர்கள் மாற வேண்டும். நீதி போதனை வகுப்புகள் வேண்டும். கதை சொல்லி விளக்கம் அளிக்கும் ஆசிரியர்கள் வேண்டும்.
தரமான நீதிக் கதைகள் எடுத்துக்கூறுவதன் மூலமாக மாணவர்கள் இளம் பருவத்திலே குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க முடியும். வாழ்க்கை கல்வி மிக அவசியமான ஒன்றாகும்.
மனிதனை மனிதனாக்கும் ஒழுக்கத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மனப்பயிற்சி, தியானம், எளிய உடற்பயிற்சி போன்றவை கல்விக் கொள்கையில் இடம்பெற வேண்டியது அவசியமாகிறது.
குடும்ப உறவுகள் சரிந்தால் சமுதாயம் சரிந்துவிடும். பொருள் ஈட்டும் கல்வியை மட்டும் நாம் கருத்தில் கொள்வோமானால் வீடு நிறைய பணம் இருக்கும். ஆனால், குடும்பம் இருக்காது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா 10 ஆவது இடத்திலோ 20 ஆவது இடத்திலோ இருந்தால்கூட கவலைப்படத் தேவையில்லை. வாழ்க்கை முறையில் உலகிலேயே நம்பர் ஒன் இடத்தில் இந்தியா இருக்க வேண்டும். அதற்கு வாழ்க்கை கல்வி அவசியம்.
உறவு பேணுகின்ற இந்தியத் தன்மையை தொலைக்காத கல்வியை வழங்க வேண்டியது இந்திய அரசின் கடமையாகும்.