1 பிப்., 2015

குரூப் - 1 முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு

பிப்ரவரி 01,2015,10:26 IST



சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் - 1 முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு எண் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.(www.tnpsc.gov.in
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஜூலை, 20ம் தேதி, சப் - கலெக்டர், டி.எஸ்.பி., வருமான வரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் பதவிகளை உள்ளடக்கிய, 79 காலிப் பணியிடங்களுக்கு, குரூப் - 1 முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது.
இத்தேர்வில் 70,547 பேர் பங்கேற்றனர். தேர்வர்கள் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீடு விதி, அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட, பிற விதிகளின் அடிப்படையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, முதன்மை எழுத்துத் தேர்வுக்கு, 4,389 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களின் பதிவு எண்கள் கொண்ட பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதன்மை எழுத்துத் தேர்வு, மே 2ம் தேதியில் இருந்து, 4ம் தேதி வரை, சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா தெரிவித்துள்ளார்.